Wednesday, February 21, 2018

பஞ்சாப் வங்கியில் ரூ.11000/- கோடி முறைகேடு!

குஜராத்தைச் சார்ந்த வைர வியாபாரி நிராவ் மோடி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் (இதில் அரசியல்வாதிகளுக்கு எந்த அளவுக்கு தொடர்பு இருந்தது என்பது இனிமேல்தான் தெரியும்!) இணைந்து செய்த கூட்டு களவாணித்தனத்தால் வங்கிக்கு மட்டுமல்ல நாட்டுக்கே சுமார் ரூ.11,000/- கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றால் மிகையாகாது. 

இந்த களவாணித்தனம் எப்படி நடந்தது? இதை ஏன் சுமார் ஏழு வருடங்களாக யாராலும் கண்டுப்பிடிக்க முடியவில்லை?

இது தொடர்பாக ஊடங்களில் வெளிவந்துள்ள செய்திகள் அனைத்துமே ஊகங்களின் அடிப்படையில் எழுதப்பட்டவைதான். இவ்வளவு பெரிய முறைகேடு கணிணி மயமாக்கப்பட்ட சூழலில் எவ்வாறு சாத்தியமானது என்பதெல்லாம் இதில் தொடர்புடைய வங்கி அதிகாரிகளே முன்வந்து தெளிவுபடுத்தினால்தான் தெரியவரும். 

நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியிலேயே இத்தகைய முறைகேட்டை ஒருசில அதிகாரிகள் இணைந்து செயல்படுத்த முடியுமென்றால் இத்தகைய முறைகேடு இன்னும் எத்தனை வங்கிகளில் நடைமுறையில் உள்ளதோ, அந்த இறைவனுக்கே வெளிச்சம். இந்த முறைகேடு கடந்த சுமார் ஏழு வருடங்களாக எந்த ஒரு ஆய்வாளர் கண்களிலும் தென்படாமல் இருந்தது எப்படி என்பது புரியாத புதிராக உள்ளது. சாதாரமான பெரிய வங்கிக் கிளைகளில் அன்றாடம் நடைபெறும் வங்கி பரவர்த்தனைகள் அனைத்தும் கன்கரண்ட் ஆடிட்டர் (concurrent auditors) என்பவர்களால் அன்றாடம் தணிக்கை செய்யப்படுவது வழக்கம். அத்துடன் வருட இறுதியில் கிளையின் நிதியறிக்கையை ஆய்வு செய்யும் தணிக்கையாளர்கள் (Statutory Auditors), வங்கி ஆய்வாளர்கள் (Internal Inspectors) நடத்தும் தணிக்கை வேறு! 

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் 2017-18ல்தான் பஞ்சாப் நேஷனல் வங்கி சிறந்த ஊழல் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்த வங்கி என்ற விருது வேறு பெற்றுள்ளது! 

இந்த முறைகேட்டில் என்னதான் நடந்தது என்று உங்களுக்குள்ள அனுபவத்தில் தமிழில் எழுதுங்களேன் என்று என்னுடைய முகநூல் நண்பர் ஒருவர் சிலதினங்களுக்கு முன்பு என்னுடைய பதிவு ஒன்றில் கமெண்ட் செய்திருந்தார். 

அதன் விளைவுதான் இந்த பதிவு. சற்று நீளமாக இருக்கும் என்பதால் இரண்டு அல்லது மூன்று தினங்கள் தொடரும். முடிந்தவரையில் எளிமையாக சொல்வதற்கு முயன்றுள்ளேன். 

இந்த முறைகேட்டின் அடிப்படை குறிப்பிட்ட வங்கி நிராவ் மோடி சார்பாக வெளிநாட்டு வங்கிகளுக்கு அளித்த கடன் கடிதம் (Letter of Credit) அல்லது ஜாமீன் கடிதம் (Letter of Undertaking - LOU) என்று கூறுகிறார்கள். இது எல்லா வங்கிகளாலும் அதன் இறக்குமதியாளர்கள் சார்பாக வழங்கப்படும் ஒன்றுதான்.  ஏனெனில் இந்திய வங்கிகள் தங்களுடைய இறக்குமதியாளர்கள் சார்பாக அவர்கள் இறக்குமதி செய்யும் பொருட்களை விற்கும் வெளிநாட்டு நபர்களுக்கு அல்லது நிறுவனங்களுக்கு நீங்கள் ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு உண்டான தொகைக்கு நாங்கள் பொறுப்பு என்றால்தான் ஏற்றுமதியாளர்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் பொருட்களை ஏற்றுமதி செய்வார்கள். இந்திய வங்கிகளின் இத்தகைய கடிதங்கள் ஏற்றுமதியாளர்கள் தங்களுடைய வங்கிகளிடம் சமர்ப்பித்து ஏற்றுமதி செய்ய தேவையான பொருட்களை தயாரிக்க அல்லது சேகரிக்க கடன் பெற்றுக்கொள்ளவும் உதவுகின்றன. 

ஆனால் இத்தகைய கடிதங்களில் அதில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையைப் பெற சம்பந்தப்பட்ட ஏற்றுமதியாளர் செய்ய வேண்டியது என்னென்ன என்றெல்லாம் குறிப்பிடப்பட்டிருக்கும். ஏற்றுமதியாளர் மற்றும் இறக்குமதியாளர் இடையே ஒப்புக்கொள்ளப்பட்ட பொருட்களின் அளவு, தரம் மட்டுமல்லாமல் அவை எவ்வாறு பொதியப்பட்டிருக்க வேண்டும் (Pack), அது எவ்வாறு காப்பீடு (Insure) செய்யப்பட்டிருக்க வேண்டும், எவ்வாறு அனுப்பப்பட வேண்டும் - விமானத்திலோ அல்லது கப்பலிலோ - என்றெல்லாம் குறிப்பிடப்பட்டிருக்கும். கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் ஏற்றுமதியாளர் செய்ய வேண்டியதை அவருடைய வங்கி உறுதிசெய்வதோடு கடிதம் காலாவதியாவதற்கு முன்பாகவே இந்திய வங்கியில் இறக்குமதிக்கு தொடர்புடைய ஆவணங்கள் அனைத்தும் வந்தடைய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும். அதுவரை இந்திய வங்கி தொகையை செலுத்த தேவையில்லை. ஆனால் இந்த முறைகேட்டில் தொடர்புடையை கடிதங்களில் இத்தகைய ஷரத்துகள் (Conditions) இருந்தனவா என்பது தெரியவில்லை.  

மேலும் சாதாரணமாக இந்தியாவில் வங்கியில் எவ்வித கடன் ஏற்பாடுகளும் (Credit arrangements) இல்லாத சூழலில் ஒருவர் இத்தகைய கடிதம் பெற அதன் மொத்த மதிப்பையும் வங்கியில் வைப்பு நிதியாக (Fixed Deposit) செலுத்த வங்கிகள் நிர்பந்திப்பது வழக்கம். ஆனால் வைர வியாபாரத்தில் வங்கியில் எத்தகைய கடன் ஏற்பாடும் இல்லாமல் இத்தகைய கடிதம் கோரப்படுவது மிக மிக அபூர்வம். ஏனெனில் வைர ஏற்றுமதி-இறக்குமதி என்றால் அது கோடிக்கணக்கில் செய்யப்படும் வணிகம். ஒரு மில்லியன் இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர்களில் அல்லது யூரோவில் கடன் கடிதங்கள் வழங்கப்படுவது சர்வ சாதாரணம். ஆகவே நிராவ் மோடிக்கு பஞ்சாப் நேஷனல் வங்கியில் எவ்வித கணக்கும் இல்லாமல் இத்தகைய கடிதம் சுமார் ஏழு வருடங்களாக வழங்கப்பட்டு வந்தது என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, அதுவும் எவ்வித Securityயும் இல்லாமல்!!

இந்த ஊழலில் வங்கியின் உயர் அதிகாரிகள் பார்வையில் படாமல் ஏழு ஆண்டுகள் இருக்க வாய்ப்பே இல்லை என்று ஏன் சொல்கிறேன் என்றால்...

1. இத்தகைய கடிதங்கள் முன்பு போல் டெலக்ஸ் (Telex) மூலம் அல்லாமல் SWIFT வழியாக அனுப்பப்படுகின்றன. SWIFTடை மென்பொருள் என்பதை விட ஒரு messaging medium அல்லது service என்பதுதான் சரியாக இருக்கும். இதன் மூலம் பணத்தை அனுப்ப முடியாது (Fund Transfer). ஆனால் பண பரிவர்த்தனைகள் தொடர்புடைய செய்திகளை அனுப்பலாம். இதில் ஒவ்வொரு வகையான செய்திக்கும் ஒரு code உண்டு. அதை பயன்படுத்தித்தான் செய்திகளை அனுப்ப முடியும். இதில் அனுப்பப்படும் ஒவ்வொரு செய்திக்கும் பின்னால் குறைந்தபட்சம் மூன்று நபர்கள் இருக்க வேண்டும் என்பது நியதி. அதாவது இந்த செய்தியை தயாரிப்பவர் (Maker), சரிபார்ப்பவர் (checker) மற்றும் உறுதிசெய்பவர் (authoriser). இதில் சாதாரணமாக தயாரிப்பவர் அதிகாரியல்லாதவராக இருப்பது வழக்கம். சரிபார்ப்பவர் கடைநிலை அதிகாரியாகவும் உறுதிசெய்பவர் உயர் அதிகாரியாகவும் இருப்பார்கள். இதில் உறுதிசெய்பவரின் மேற்பார்வையில்தான் இந்த செய்தி அனுப்பப்படவேண்டும் என்பதும் நியதி. 

2. இத்தகைய கடிதங்கள் SWIFT வழியாக அனுப்பப்பட்டதும் அதை பெற்றுக்கொண்ட வங்கியிலிருந்து நிச்சயம் ஒரு conirmation message வந்துவிடும். அல்லது மேற்கூறப்பட்ட கடிதம் காலாவதியாகும்போதோ அல்லது அதன் அடிப்படையில் ஏற்றுமதியாளருக்கு கடன் வழங்கும்போதோ அல்லது ஏற்றுமதிக்குண்டான ஆவணங்களை சமர்ப்பிக்கும்போதோ நிச்சயம் SWIFT மூலமாகவே தகவல் வந்துவிடும். அதை பெறுபவரும் ஒரே ஆளாக இருக்க வாய்ப்பே இல்லை. 

3.ஒவ்வொரு நாளின் இறுதியிலும் அந்த கிளையிலிருந்து அனுப்பப்பட்ட/பெறப்பட்ட SWIFT செய்திகளின் பட்டியல் கிளை அல்லது சம்மந்தப்பட்ட இலாக்கா மேலாளரின் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆகவே அனுப்பப்பட்ட செய்தி முறைகேடாக அனுப்பப்பட்டிருந்தால் அந்த நாளின் இறுதியிலேயே கண்டுபிடித்திருக்க முடியும்.

4.இந்தியாவிலுள்ள அனைத்து வங்கிகளிலும் CBS எனப்படும் வங்கி பரிவர்த்தனை மென்பொருள் நிறுவப்பட்டுள்ளது. இத்துடன் SWIFT மற்றும் அண்ணிய செலவாணி வர்த்தக மென்பொருளும் (Forex software) இணைக்கப்பட்டிருக்க (Integrate) வேண்டும். அத்தகைய சூழலில் அன்றாடம் நடைபெறும் அனைத்து பரிவர்த்தனைகளும் வங்கிக் கிளை மேலாளர் பார்வைக்கு செல்லாமல் இருக்கவே முடியாது. ஆனால் இந்தியாவிலேயே இரண்டாவது வங்கி மற்றும் அதிக அளவில் கணிணிமயமாக்கப்பட்ட வங்கி என்ற பெயர் பெற்றுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் SWIFT இன்னமும் CBS அப்ளிக்கேஷனும் இணைக்கப்படாமல் தனி மென்பொருளாக (stand alone) இயங்கி வந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. முறைகேடுகள் கண்டுபிடிக்கப்படாமல் இருந்ததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் எனலாம்.

5.இத்தகைய கடிதங்கள் வைர இறக்குமதிக்காக வழங்கப்படும் போது அதிக பட்சம் மூன்று மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும். ஒருவேளை அந்த காலக் கட்டத்திற்குள் வர்த்தகம் இயலாமல் போனால் மேலும் மூன்று மாதத்திற்கு நீட்டிக்கப்படலாம். அத்தகைய நீட்டிப்புக்கு கடிதத்தை வழங்கிய கிளை ஒரு புதிய LOU வழங்க வேண்டும். அதையும் வங்கியின் உயர் அதிகாரியின் அனுமதியின்பேரிலேயே வழங்க முடியும். 

4.பஞ்சாப் நேஷனல் வங்கி கடந்த சில ஆண்டுகளாக நிராவ் மோடியின் நிறுவனங்கள் சார்பாக வழங்கிய கடிதங்களில் சுமார் 280 கடன் கடிதங்களில் இதுவரை திருப்பிச் செலுத்தாமல் போன மொத்த மதிப்புத்தான் இந்த ரூ.11,000/- கோடி என்கிறார்கள். இது எப்படி சாத்தியமானது? ஒரு முறை இத்தகைய பரிவர்த்தனையில் வழங்கப்பட்ட கடிதத் தொகையை காலாவதியாவதற்கு பின்பும்  வாடிக்கையாளரால் திருப்பிச் செலுத்த முடியாமல் போனால் மீண்டும் அத்தகையவருக்கு முழு தொகையும் முன்பணமாக பெறாமல் கடன் கடிதங்கள் வழங்கலாகாது என்ற நியதி உண்டே? (சமீபத்தில் நிராவ் மோடி வங்கிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தங்களுடைய நிறுவனங்கள் இதுவரை அளிக்கப்பட்ட பல கடிதங்களுக்குண்டான தொகையை சரியான நேரத்தில் செலுத்தியிருப்பதாகவும் தங்களுடனான வர்த்தகத்தின் மூலம் வங்கி பல கோடி கமிஷன் தொகையாக ஈட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளதை பார்க்கும்போது இதே வங்கி கிளை மூலமாக பல ஆயிரம் கோடி அளவுக்கு கடன் கடிதங்கள்/ஜாமீன் கடிதங்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அதில் 280 கடிதங்கள் மட்டுமே நிலுவையில் இருப்பதாகவும் தெரிகிறது. இதில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்பதை வங்கி அவருக்கு அளித்த விளத்தை வெளியிட்டால்தான் தெரியும்)

இத்தகைய நியதிகள் இருந்தும் இத்தகைய முறைகேடு நடந்துள்ளது என்றால் அது தற்போது கைது செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் மட்டுமே காரணமாக இருக்க வாய்ப்பில்லை.

இதை மேலும் ஆராய்ந்தால்...

வைர நகைகளை தயாரித்து உலகெங்கும் விற்பனை செய்வதில் நிராவ் மோடி நிறுவனங்கள் பெயர்பெற்றவை. இவர்கள் நகை தயாரிப்புக்கு தேவையான வெட்டப்படாத (Uncut) மற்றும் தீட்டப்படாத (Unpolished) வைரக் கற்கள், செயற்கை முத்துக்கள் (Cultured or artificial Pearls) ஆகியவற்றை இறக்குமதி செய்து பிறகு அவற்றை விலையுயர்ந்த நகைகளாக வடிவமைத்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விற்பவர்கள். அதில் அவர் மட்டுமல்லாமல் அவருடைய குடும்பமே ஈடுபட்டிருந்தது. சென்னை உட்பட பல இந்திய பெரு நகரங்களில் அவருக்கு கடைகள் உள்ளன. அவருடைய நகைகளை அணிந்து விளம்பரம் செய்ய பிரியங்கா சோப்ரா போன்ற பிரபலங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததும் அனைவருக்கும் தெரியும்.  அவருடைய நிறுவனங்கள் வடிவமைத்த வைர, முத்து ஆபரணங்கள் லண்டன் சோத்பி போன்ற பல பிரபல நிறுவனங்களால் காட்சிப் படுத்தவும் ஏலத்தில் விற்கப்படவும் தகுதியுள்ளவையாக கருதப்பட்டுள்ளன. ஆக அவர் ஏதோ முறைகேடுகளில் மட்டுமே ஈடுபடும் மனிதர் அல்ல என்பதும் தெரிகிறது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக உலகளவில் வைர வர்த்தகம் நலிவடைந்து வருகிறதாம்! அப்படியே வர்த்தகம் நடந்தாலும் அதில் அவ்வளவாக இலாபம் கிட்டுவதில்லை என்கிறார்கள். இருப்பினும் காலம் காலமாக இத்தகைய வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிராவ் மோடி போன்றவர்களால் இதிலிருந்து வெளியில் வர முடிவதில்லை. ஏற்கனவே கொள்முதல் செய்து வைத்திருக்கும் வைரக் கற்களை ஆபரணங்களாகவோ அல்லது தனி வைரக்கற்களாகவோ விற்க முடியாத சூழலில் இத்தகைய முறைகேட்டில் ஈடுபட்டால் என்ன என்று தோன்றியிருக்கலாம். அதற்கு துணை போக வங்கி அதிகாரிகள் இருக்கவே எவ்வித இடையூறும் இல்லாமல் வர்த்தகம் தொடர்ந்திருக்கிறது. 

இதில் இன்னொரு ரகசியமும் உள்ளது. வைர வர்த்தகத்தில் ஈடுபடும் குடும்ப உறுப்பினர்களே இந்திய இறக்குமதியாளர்களாவும் வெளிநாட்டு ஏற்றுமதியாளர்களாகவும் இருந்துள்ளனர். அதற்கெனவே பல போலி நிறுவனங்களை நிராவ் மோடியும் அவருடைய மாமா மற்றும் உறவினர்கள் ஈடுபட்டிருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.  

நிராவ் மோடி சார்பாக வங்கி வழங்கிய கடன் கடிதங்கள் அனைத்துமே வெளிநாட்டிலுள்ள அவருடைய குடும்பத்தினர் நடத்தில் வந்து போலி நிறுவனங்கள் பெயரில்தான் இருந்திருக்க வேண்டும். இவருடைய கடன் கடிதத்தை காட்டி அவர்கள் அந்த நாட்டிலுள்ள இந்திய வங்கிகளில் இருந்து கடன் பெற்றிருக்க வேண்டும். அப்படியே இருந்தாலும் பெற்ற கடனை பயன்படுத்தி வைரத்தை ஏறுமதி செய்திருந்தால் இதில் பிரச்சினையே இல்லை. ஆனால் அதுவல்லவே அவர்கள் நோக்கம்! வெளிநாட்டு வங்கிகளில் இருந்து பெற்ற கடனை அங்கேயே முடக்கவோ முதலீடாகவோ செய்திருக்க வேண்டும்.  கடிதம் காலாவதியாக வேண்டிய நாள் நெருங்கும்போது அதன் மதிப்பு மற்றும் அதற்குண்டான வட்டியையும் சேர்த்து வேறொரு கடிதத்தை பெறுவது அல்லது முதலில் வழங்கிய கடிதத்தின் காலத்தை கூட்டுவது என்று தொடர்ந்திருக்க வேண்டும். இதை ஒரு vicious circle என்பார்கள். இதுபோன்று பல பரிவர்த்தனைகள் நடந்திருக்க வேண்டும். இதில் சம்மந்தப்பட்ட அதிகாரி அந்த கிளையிலோ அல்லது அந்த இலாக்காவிலோ இருந்த வரையிலும் மற்றவர் யாருக்கும் தெரியாமல் மறைக்கப்பட்டிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட அதிகாரி ஓய்வு பெற்ற பிறகு பொறுப்பேற்ற வங்கி அதிகாரி இந்த முறைகேட்டை தொடர்ந்து செய்ய மறுத்ததன் விளைவாக அதுவரை வழங்கப்பட்டிருந்த அனைத்து கடிதங்களும் அவற்றின் அடிப்படை தேவையான ஏற்றுமதி நடைபெறாத காரணத்தால் அவற்றிற்கு வழங்கப்பட்ட கடன் தொகை முழுவதும் அவற்றை வழங்கிய வங்கியின் (பஞ்சாப் நேஷனல் வங்கி) தலையில் விழுந்துவிட்டது. 

இவ்வாறு ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்களோ அல்லது நெருங்கிய நண்பர்களோ உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்துக்கொண்டு ஏற்றுமதி/இறக்குமதி வர்த்தகத்தில் ஏற்படுவது இந்தியாவில் மிக மிக சாதாரணம். இது அனைத்துத் தர வர்த்தகத்திலும் நடைபெறுவதுதான். ஆனால் இது உண்மையான வர்த்தகத்தில் முடிந்தால் யாருக்கும் பிரச்சினை இல்லை. கடன் பெறுவதன் நோக்கம் வர்த்தகம் செய்வதல்லாமல் அயல் நாடுகளில் சொத்து வாங்கி குவிப்பது என்று ஆகும்போதுதான் முறைகேட்டில் முடிகிறது. இத்தகைய முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு பெற்ற கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற எண்ணமே இருக்காது. முடிந்தவரையிலும் கொள்ளையடிப்பதுதான் நோக்கமாக இருக்கும். 

நிராவ் மோடியின் நோக்கமும் அதுவாகத்தான் இருந்திருக்க முடியும். ஆனால் அத்தகையவர் நாட்டின் மிக உயர்ந்த பதவி வகிக்கும் ஒருவர் பங்குகொள்ளும் நிகழ்ச்சி ஒன்றில் அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள முடிகிறது என்கிறபோதுதான் எதிர் கட்சிகளுக்கு அந்த தலைவர் மீதே சந்தேகம் ஏற்படுகிறது.

இதில் இன்னொரு கோணமும் உள்ளது. இந்த முறைகேட்டை சம்மந்தப்பட்ட கிளை மட்டுமல்லாமல் வங்கி உயர் அதிகாரிகளோ கண்டும் காணாதது போல் இருந்திருக்கலாம். ஏனெனில் நிறுவன உரிமையாளரின் பின்னால் இருக்கும் பெயருக்கும் பெரிய தலைவர் ஒருவருக்கும் ஒற்றுமை உள்ளதே. அவருடன் உண்மையில் தொடர்பு இருந்திருக்காவிட்டாலும் அவ்வாறான ஒரு பிரமையை வங்கி அதிகாரிகள் மத்தியில் உருவாக்கியிருக்கலாம். கிடைக்கும் சொற்ப கையூட்டுக்கு மயங்குவதை விட இத்தகைய மிரட்டல்களுக்கு அடிபணியும் வங்கி அதிகாரிகள்தான் மிக அதிகம்!

****** 

Thursday, March 1, 2012

வங்கிக் கொள்ளை - வங்கிகளின் பாதுகாப்பின்மை


இந்தியாவில் கடந்த கால் நூற்றாண்டில் ஏதாவதொரு துறை அசுர வளர்ச்சி அடைந்துள்ளது என்றால் அது வங்கித்துறைதான் என்றால் மிகையாகாது.

அஞ்சல் அலுவலகங்களுக்கு அடுத்தபடியாக இன்று நாடெங்கும் பரந்து விரிந்து பரவியுள்ளது வங்கித்துறை. மூவாயிரம் கிளைகளுக்கு குறைவாக உள்ள பொதுத்துறை வங்கியே இல்லை எனவும் கூறலாம். நாளொன்றுக்கு பல லட்சம், ஏன் கோடி என்றும் கூறலாம், வாடிக்கையாளர்களுடைய அன்றாட வர்த்தக தேவைகளை பூர்த்தி செய்துக்கொண்டிருக்கும் வங்த்துறையில் சமீப காலமாக மேம்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் சேவை (improved customer service) என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல வசதிகள் வங்கிகளின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளன.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு வங்கிகளில் கவுண்டர் மேசையின் (counter top) உயரம் சுமார் நான்கிலிருந்து ஐந்தடி வரை இருக்கும். சராசரி உயரமுள்ள வாடிக்கையாளர் சற்று எம்பி பார்த்தால்தான் மறுபுறத்தில் அமர்ந்திருக்கும் குமாஸ்தாவின் தலை தெரியும். காசாளர் அமர்ந்திருக்கும் அறையோ கம்பி வலைகளால் நாலாப்புறமும் மறைக்கப்பட்டிருப்பதுடன் மேற்கூரையும் அமைந்திருக்கும். காசாளர் அறைக்குள் அமர்ந்திருக்கும்போது கதவை பூட்டிக்கொண்டுதான் இருக்க வேண்டும். அவருடைய அனுமதி இல்லாமல் கிளை மேலாளர் கூட அவருடைய அறைக்குள் நுழைந்துவிட முடியாது. காசாளருடைய காலடியிலேயே பர்க்ளர் அலாரத்தை (burglar alarm)  ஒலிக்கச் செய்ய உதவும் ஸ்விட்சும் பொருத்தப்பட்டிருக்கும். அசம்பாவிதமாக ஏதும் நடைபெறும் பட்சத்தில் ஒலிக்கச் செய்யப்படும் இந்த அலாரத்தின் ஒலி சுட்டுவட்டாரத்தையே கலக்கும் அளவுக்கு இருக்கும் என்பதால் வங்கியிலுள்ளவர்கள் மட்டுமல்லாமல் சுமார் நூறடி சுற்றளவிலுள்ள அனைவரையும் இது எச்சரித்துவிடக் கூடியதென்பதால் இதை அனைத்து வங்கி காசாளர் அறையிலும் பொருத்த வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் பாதுகாப்பு விதிகளில் ஒன்றாக இருந்தது. மேலும்  கிளைகளின் வாயிலில் இருபுறமிருந்தும் அடைக்க வசதியாக இரும்பிலான அடுக்கு கதவுகள் (collapsible gate) பொருத்தப்பட்டதுடன் இரு பாதி கதவுகளுக்கும் இடையில் ஒருவருக்கு மேல் நுழைய முடியாத முறையில் இரும்பிலான செயினும் பொருத்தப்பட்டிருக்கும்.

புதிய தலைமுறை வங்கிகளின் வருகை, கணினியை மையமாக வைத்து செயல்படத் துவங்கிய வங்கி சேவை ஆகியவைகளால் அதிகபட்ச பாதுகாப்புடன் அமைக்கப்பட்டிருந்த வங்கி கிளை உள்கட்டமைப்பு (branch interiors) முற்றிலுமாக தகர்த்தெறியப்பட்டு கண்களுக்கு குளுமையான நிறத்தில், குளிர்சாதன வசதிகளுடன் கூடிய மற்றும் அழகிய வடிவமைப்புகளுடன்  அமைக்கப்பட்ட மேலாளர் அறை, வரவேற்பறை, குமாஸ்தா மற்றும் வங்கி அதிகாரிகளுடன் நெருங்கி பேச வசதியாக இரண்டடி உயரத்திற்கும் குறைவான திறந்த கவுன்டர் மேசைகள் (open counters) மற்றும் கண்ணாடிகளால் ஆன தடுப்புகளால் மட்டுமே சூழப்பட்ட காசாளர் அறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

கிளைகளின் வாசலில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு அடுக்கு கதவுகள் அகற்றப்பட்டு முழுவதும் கண்ணாடியிலான (glass plate) கதவுகள் அலங்கரிக்க துவங்கின. இன்று எந்த வங்கியிலும் பர்களர் அலாரம் இல்லை என்றே தோன்றுகிறது. (அது இருந்திருந்தால் கீழ்கட்டளை வங்கி கிளையொன்றில் சந்தேகப்படும்படியான நபர்கள் வாடிக்கையாளர்களை சுற்றி வளைத்தபோதே காசாளர் இந்த அலாரத்தை இயக்கியிருந்திருப்பார்.)

இத்தகைய வசதிகள் புதிய தலைமுறை வங்கிகளுக்கு தங்களுடைய வர்த்தகத்தை பன்மடங்கு பெருக்க உதவியதைக் கண்ட பொதுத்துறை வங்கிகளும் வேறு வழியின்றி இவற்றிற்கு நிகரான கட்டமைப்பு வசதிகளை அறிமுகப்படுத்தின. இதன் விளைவாக   பொதுத்துறை வங்கிகளுடைய வர்த்தகம் பெருகியதோ இல்லையோ வங்கிக் கிளைகளின் பாதுகாப்பு பெரிதாக பாதிக்கப்பட்டன என்பது உண்மை.  குறிப்பாக சுமார் பத்தடி அளவுக்கு அமைந்துள்ள விசாலமான, கண்ணாடி கதவுகளை மட்டுமே கொண்டுள்ள வாயில்கள் வங்கிக் கொள்ளையர்கள் மிக எளிதாக வெளியேற வசதியாக அமைந்துவிட்டன. அது போலவே வாடிக்கையாளர்களுடைய வசதிக்கென அமைக்கப்பட்டுள்ள குறைந்த உயரமுள்ள கவுன்டர் மேசைகள் வாடிக்கையாளர்களுடைய ரகசியங்களை மற்றவர்களும் எளிதில் தெரிந்துக்கொள்ளக் வகையில் அமைந்துள்ளன என்பதையும் மறுப்பதற்கில்லை. கண்ணாடி தடுப்புகளை மட்டுமே கொண்டுள்ள காசாளர் அறையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நோட்டு கற்றைகளையும் அவருடைய அறைக்கு வெளியில் வரிசையில் காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் எளிதில் காணமுடிகிறது.

ஒருசில தினங்களுக்கு முன்பு என்னுடைய குடியிருப்பிற்கு அருகிலுள்ள ஒரு பொதுத்துறை வங்கிக்கு சென்றிருந்தேன். அங்கு நான் சந்திக்க விரும்பிய அதிகாரி இருக்கையில் இல்லாதிருக்கவே அவருடைய திறந்த கவுன்டர் மேசைக்கு முன்பு இருந்த இருக்கைகள் ஒன்றில் சுமார் ஐந்து நிமிடம் அமர்ந்திருக்க நேர்ந்தது.  அந்த ஒரு சில நிமிடங்களில் அவருடைய மேசையில் விரிந்து கிடந்த வேறொரு வாடிக்கையாளருடைய கணக்கு விவரங்கள் அடங்கிய கணினி அறிக்கையை (computer print out) என்னால் எளிதில் வாசிக்க முடிந்தது. அதற்கருகில் பல வாடிக்கையாளர்களால் தங்களுடைய கணக்குகளில் செலுத்தப்பட்ட காசோலைகள் ஒரு க்ளிப்பில்.... அந்த அதிகாரியின் இருக்கைக்கு இடமும், வலமும் இருந்த இருக்கைகளும் காலியாக இருந்தன. அந்த சில நிமிடங்களில் அங்கு கேட்பாரற்று கிடந்த காசோலைகளை யார் வேண்டுமானாலும் எடுத்து சென்றிருக்க முடியும்.

வாடிக்கையாளர்களுடைய வசதிகளை பெருக்குவதில் மட்டுமே முனைப்பாயிருக்கும் வங்கிகள் தங்களுடைய வங்கி பாதுகாப்பிலும் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை சமீபத்தில் ஒரே மாதத்தில் சென்னையில் நடந்துள்ள ஒரே மாதிரியான இரு வேறு வங்கிக் கொள்ளைகள் மீண்டும் உணர்த்தியுள்ளன. பெரும் பொருட்செலவில் உள்கட்டமைப்புகளை (interior) செய்ய தயங்காத வங்கிகள் காவல்துறை பலமுறை பரிந்துரைத்த கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைகளை நிறைவேற்ற மறுக்கின்றன. பல ஆயிரம் கோடி முதலீட்டில் தங்களுடைய அனைத்து கிளைகளும் கணினி மயமாக்கப்பட்டுவிட்டன என்பதை பெருமையுடன் பறைசாற்றும் அதே வங்கிகள் கிளை ஒன்றிக்கு சில ஆயிரங்கள் மட்டுமே தேவைப்படும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த தயங்குவது வேடிக்கைதான்.

இத்தகைய பிடிவாத போக்கிற்கு மிக முக்கிய காரணம் மேலாண்மை திறனற்ற அதிகாரிகள் வங்கிகளின் மேலிடத்தில் அமர்ந்திருப்பதுதான். இன்று நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான வங்கித் துறையில் இன்றைய தொழில்நுட்ப வசதிகளை அறிமுகப்படுத்த  மறுக்கும் அல்லது தயங்கும் உயர் அதிகாரிகளை பொதுத்துறை வங்கிகளிலிருந்து தயவு தாட்சண்யம் பாராமல் நீக்கிவிட்டு இளம் அதிகாரிகளை நியமிக்க மத்திய அரசு முன்வரவேண்டும். வங்கிகளின் செயல்பாடுகளை கண்காணிக்கும் பொறுப்பிலுள்ள மத்திய ரிசர்வ் வங்கி வங்கிகளுடைய பாதுகாப்பு வசதிகளையும் முறைபடுத்த வேண்டியது அவசியம். வங்கிக் கிளைகளுக்கு உரிமம் வழங்கும் நேரத்தில் ஒரு கிளைக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கிளை திறக்கப்படும் தினம் முதலே அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் கிளை அமைந்துள்ள பகுதியில் செயல்படும் வட்டார காவல்துறை ஆய்வாளரின் (Inspector of Police) சான்றிதழையும் (security certificate) பெற்று அதை கிளை திறப்பதற்கான ரிசர்வ் வங்கியின் உரிமத்துடன் கிளை அலுவலகத்தில் வாடிக்கையாளர்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்க வேண்டும்.

ஆனால் இத்தகைய பாதுகாப்பு வசதிகள் மட்டுமே வங்கிக் கொள்ளைகளை தடுத்துவிட முடியுமா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும். வாடிக்கையாளர்களின் வசதிக்காக மாற்றியமைக்கப்பட்ட கட்டமைப்பு வசதிகளை அறிமுகப்படுத்தும் வங்கிகள் அத்துடன் அவை வங்கி பாதுகாப்பிற்கு எந்த வகையிலும் குந்தகம் விளைவித்து விடாமல் இருக்க தன்னுடைய பணியாளர்கள் செயலாற்றும் முறைகளிலும் சில விதிமுறைகளை அறிமுகப்படுத்துவது அவசியம்.  வங்கியின் விதிமுறைகளை தங்களுடைய வசதிக்கேற்ப மீறும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை அவர்களுடைய விதிமீறல்களால் வங்கிக்கும் வாடிக்கையாளர்களுக்கும் ஏற்படும் இழப்புக்கு பொறுப்பாக்கி தண்டிக்கவும் தயங்கக் கூடாது.

குறிப்பாக, காசாளர் தன்னுடைய சொந்த பொறுப்பில் கவுன்டரில் வைத்திருக்கக் கூடிய தொகையை (cash on counter) மிகக் குறை ந்த அளவில் (bare minimum) நிர்ணயிக்க வேண்டும்.  இன்றைய கணினி யுகத்தில் பத்து, பதினைந்து லட்சம் ரொக்கத்தை கணக்கிலிருந்து எடுக்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஆகவே எந்த ஒரு கிளையும் (பெரு நகரங்களில் (metro cities) இயங்கும் ஒரு சில மிகப் பெரிய கிளைகளை (extra large branches) தவிர)  இத்தகைய பெருந்தொகையை காசாளர் வசம் விட்டு வைக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும், இன்றைய கணினி யுகத்தில் பல வங்கி கிளைகளின் மொத்த பரப்பளவும் ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் சதுர அடிகள்தான் என்பதால் எப்போதாவது வரும் வாடிக்கையாளரின் பெரிய ரொக்க தேவைக்கு கிளையின் பாதுகாப்பு பெட்டகத்திலிருந்து (cash safe) எடுத்து கொடுப்பது எளிது. இப்போதும் பெரும்பாலான வங்கிகளின் கவுண்டர் ரொக்க அளவு இரண்டிலிருந்து மூன்று லட்சம்தான் இருக்கக் கூடும் என்று கருதுகிறேன். ஆனாலும் அடிக்கடி பாதுகாப்பு  பெட்டக அறைக்கு சென்று வர வேண்டும் என்பதற்காக இந்த அளவையும் கடந்து காசாளர்கள் தங்கள்வசம் ரொக்கத்தை வைத்திருப்பது வழக்கம்.

சமீபத்தில் நடந்த இரு கொள்ளைகளுமே சென்னை புறநகரில் அமைந்துள்ள சிறிய கிளைகளில்தான் என்பதால் இவற்றின் cash-on-counter limit பதினைந்து லட்சமாக இருக்க வாய்ப்பில்லை. ஆகவே இவ்விரு கொள்ளைகளுக்குமே கிளை விதிகளை மீறிய அதிகாரிகள் மற்றும் காசாளரை பொறுப்பாக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து. அப்போதுதான் இதுபோன்ற விதி மீறல்களில் வங்கி பணியாளர்கள் இனி ஈடுபடமாட்டார்கள்.


***********

பி.கு.: பிடிபட்ட கொள்ளையர்களை தற்காப்பு என்ற பெயரில் காவல்துறை சுட்டுக்கொன்றுவிட்டதைப் பற்றி பலவிதமான கருத்துக்கள் எழுதப்பட்டுவிட்டன. இப்படிச் செய்தால்தான் மற்ற கொள்ளையர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபடமாட்டார்கள் என்ற ஒரு எண்ணம் மக்கள் மத்தியில் உள்ளதையும் காண முடிந்தது. ஆனால் இதே போன்ற ஒரு சூழல் காவல்துறையின் அத்துமீறலால் நடந்ததை பல முறை நாம் கண்டிருக்கிறோம்.

ஒவ்வொரு குற்றத்திற்கும் இன்னின்ன பிரிவுகளின்படி இன்ன தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதை இந்திய குற்றவியல் மற்றும் இந்திய தண்டனைச் சட்டங்கள் கூறுகின்றன. அத்தகைய சட்டங்களை செயல்படுத்த வேண்டிய காவல்துறையே தற்காப்பு என்ற போர்வையில் நடத்தி முடிக்கும் என்கவுன்டர் கொலைகளின் பட்டியல் நீண்டுக்கொண்டே போவது நாட்டில் நடப்பது ஜனநாயகம்தானா என்ற கேட்க தூண்டுகிறது.

இந்த பதிவை நான் எழுதி முடித்து நான்கைந்து நாட்கள் ஆகிவிட்டன. என்னுடைய இணைப்பு (internet connection) சரிவர இயங்காததால் பதிவை அப்லோட் செய்ய முடியாமல் போய்விட்டது.